தத்தெடுக்க தகுதியானவர்கள்:
18 வயது பூர்த்தியான இந்து ஆண், பெண். தன்னிச்சையாக எல்லா விஷயங்களிலும் முடிவெடுக்கக்கூடிய மனநிலையில் உள்ளவராக இருக்க வேண்டும். இந்து மதத்திலிருந்து வேறு ஒரு மதத்துக்கு மாறியிருக்கக் கூடாது. ஏனென்றால் ஒரு இந்து, இந்து மதத்தைச் சார்ந்தவரையே தத்து கொடுக்கவும் எடுக்கவும் முடியும்.
திருமணமான ஆண், தன் மனைவியின் ஒப்புதல் இல்லாமல் தத்தெடுக்க இயலாது. ஒருவேளை மனைவி உலக வாழ்க்கையைத் துறந்திருந்தாலோ, மனநிலை பாதிக்கப்பட்டவராக இருந்தாலோ ஒப்புதல் பெற அவசியமில்லை.
திருமணம் முடித்த இந்து பெண் தன்னிச்சையாக தத்து கொடுப்பதும் எடுப்பதும் சட்டத்தால் அங்கீகரிக்கப்படுவதில்லை. அந்தத் திருமணம் கணவரின் மரணத்தாலோ, கணவர் மதம் மாறியதாலோ, உலக வாழ்வை முற்றிலும் துறந்ததனாலோ, நீதிமன்றத்தால் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று அறிவிக்கப்பட்டிருந்தாலோ தவிர, அந்தப் பெண்ணுக்கு உரிமை இல்லை. அப்படி அந்தப் பெண் விரும்பும் பட்சத்தில் கணவர் மூலம் அதை நிறைவேற்றிக் கொள்ள வேண்டும். திருமணமாகாத பெண் தத்து எடுத்துக் கொள்ள தடை ஏதுமில்லை.
தத்து கொடுக்கும் உரிமை உள்ளவர்கள்:
பெற்றோர் அல்லது காப்பாளருக்கே ஒரு குழந்தையை தத்து உரிமை உள்ளது . ஒரு வேளை தத்துக் கொடுக்கப்படும் குழந்தை ஆதரவில்லாத குழந்தையாக இருந்தால் அல்லது பெற்றோர் இருந்து அவர்கள் மனநலம் பாதிக்கப்பட்டவராக இருப்பின் அல்லது உலக வாழ்க்கையை துறந்தவராக இருப்பின், காப்பாளராக இருப்பவர் தத்து கொடுக்கலாம். எனினும் நீதிமன்றத்தின் ஒப்புதல் அவசியம். ஒரு இந்து ஆண், பெண் தத்து எடுப்பதற்கான அதே விதிமுறைகள், தத்துக் கொடுப்பவருக்கும் பொருந்தும்.
யாரை தத்து கொடுப்பது, எடுப்பது:
ஒரு இந்து, தன் மதத்தைச் சார்ந்த குழந்தையை மட்டுமே தத்துக் கொடுக்க, எடுக்க இயலும். இப்போது 1956 சட்டத்தின் பின் ஒரு ஆண் மற்றும் பெண் குழந்தையை சமமாக தத்து கொடுக்க, எடுக்க இயலும். 15 வயதுக்கு உட்பட்ட குழந்தையை மட்டுமே தத்து எடுக்க முடியும்.
ஒருவேளை அந்தச் சமூகம் அந்த வயதைத் தாண்டி தத்தை அனுமதிக்குமானால், சட்டமும் நீதிமன்றமும் ஏற்றுக் கொள்ளும். அது போல திருமணமான நபர், தத்துக்கு ஏற்றவர் அல்லர். சமூக வழக்கம் இருந்தால், சட்டம் அனுமதிக்கும்.
ஏற்கனவே தத்து எடுக்கப்பட்ட குழந்தையை மீண்டும் தத்துக் கொடுக்கப்படுவதை சட்டம் அனுமதிப்பதில்லை. இந்த சட்ட விதி, குழந்தையின் நலன் கருதியே சேர்க்கப்பட்டுள்ளது. ஒரு ஆண், பெண் குழந்தையை தத்தெடுத்தால் 21 வயது மூத்தவராக இருக்க வேண்டும். ஒரு ஆண் குழந்தையை ஒரு பெண் தத்தெடுக்கும் போது, 21 வயது மூத்தவராக இருக்க வேண்டியது அவசியம். சட்டப்படி தத்து ஒப்பந்தப் பத்திரம் பதிவு செய்தும், நீதிமன்றத்தின் மூலம் தீர்ப்பு பெற்றும் தத்து நடைபெறுகிறது.
இந்திய கிறிஸ்தவர்கள் பெரும் பாலும் கார்டியன்ஸ் அண்ட் வார்ட்ஸ் ஆக்ட் 1890ஐ பின்பற்றுகிறார்கள், அதன் விதிமுறைகள்:
தத்தெடுக்கும் பெற்றோர் பொருளாதார ரீதியாக ஓரளவுக்கு இயன்றவராக இருத்தல் வேண்டும். குழந்தை வளர்ப்பில் இடையூறு தரக்கூடிய உடல் உபாதைகள், நோய்கள் இருக்கக் கூடாது. குழந்தை தத்தெடுக்கும் பெற்றோரின் திருமண வாழ்வு குறைந்தது 2 வருடங்கள் நல்ல முறையில் சச்சரவுகள் இன்றி இருத்தல் வேண்டும்.
அவர்கள் எந்த குற்ற வழக்கிலும் சம்பந்தப்பட்டவராக இருக்கக் கூடாது. மேலும், சட்டப்படி திருமணம் செய்யாமல் இணைந்து வாழும் தம்பதியருக்கு தத்து மறுக்கப்படுகிறது. குறைந்தது தத்தெடுக்கும் எதிர்பாலின குழந்தையை விட 21 வயது மூத்தவராக இருப்பது அவசியம்.
நம் நாட்டில் குழந்தை தத்தெடுப்பில் ஓரளவு முன்னேற்றம் வந்ததால் அதன் 2006 ஆண்டின் முக்கிய சட்டத் திருத்தம் தத்து எடுப்பினை அனைத்து மதங்களுக்கும் சமமாக ஆக்கியது. இந்தச் சட்டத்தின் 41/வது பிரிவின் படி, ஒரு குழந்தையின் அரவணைப்புக்கும், வளர்ச்சிக்கும் அந்தக் குழந்தையின் குடும்பமே முழுப் பொறுப்பாளர்கள் ஆகிறார்கள். 2006ம் ஆண்டு மேற்கூறிய சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்ததின் மூலம் ஆதரவற்ற, கைவிடப்பட்ட, ஒப்படைக்கப்பட்ட குழந்தைகள் இந்தச் சட்டத்தின் கீழ் உரிய நபருக்கு தத்து கொடுக்க, எடுக்க வழிவகை செய்துள்ளது.
அதோடு அவ்வப்போது மத்திய, மாநில அரசாங்கம் கொண்டு வரும் வழிகாட்டுதலின் படி, குழந்தைகள் தத்து கொடுக்கப்படும். மேலும், தத்து கொடுப்பதற்கும், எடுப்பதற்கும் தேவையான விதிமுறைகளைப் பின்பற்றியதை ஊர்ஜிதம் செய்த பின்னர், நீதிமன்றம் உறுதி செய்துவிட்டுதான் தத்து நடைமுறைப்படுத்தப்படும். ஆதரவற்று விடப்படும் குழந்தை சைல்ட் வெல்பேர் கமிட்டி முன் சமர்ப்பிக்கப்பட்டு எல்லைக்குட்பட்ட காவல்நிலையத்தில் புகார் சமர்ப்பித்து மேலும், நாளிதழ், ஊடகம் மூலம் விளம்பரப்படுத்தி உரியவர் வரவில்லை என்றால் தத்து ஏற்ற குழந்தை என்று சைல்ட் வெல்பேர் கமிட்டியின் 2 உறுப்பினர்கள் சான்று செய்த பின்னர் தத்து கொடுக்கலாம்.
பராமரிக்க இயலாமல் விடும் பெற்றோருக்கு 2 மாதங்கள் கால அவகாசம் கொடுத்து ஆலோசனை கொடுத்து மனம் மாறவில்லை என்றால் தத்துக்கு வழி செய்யலாம். நன்கு புரிந்து கொள்ளக்கூடிய மனநிலையில் இருக்கும் குழந்தைக்கு (பொதுவாக சுமார் 7 வயது) தத்து போவது பற்றி முடிவு எடுக்க உரிமை உண்டு. தத்தெடுப்பவரின் திருமண நிலையினை கருத்தில் கொள்ளாமல் தகுந்த நபர் என்றால் தத்து கொடுக்கலாம் என்றாலும் பொதுவாக திருமணம் ஆகாத ஆணுக்கு பெண் குழந்தை தத்து கொடுப்பது இல்லை.
திருமணமாகாத பெண், ஆண் குழந்தையை தத்து எடுக்க தடையில்லை. தனக்கு இருக்கும் அதே பாலின குழந்தையையே தத்தெடுக்க எந்தவிதத் தடையும் இல்லை. இந்த சட்டத்தின் கீழ் தகுதி படைத்த வெளிநாட்டவருக்கும் தத்து கொடுக்க எந்தத் தடையும் இல்லை.
கருத்துகள் இல்லை