* மாவட்டம் : கரூர்
* இடம் : குளித்தலை
முகவரி :
திருப்பராய்த்துறை. திருச்சியில் - கரூர் செல்லும் சாலையில் 15 கி.மீ. தூரத்தில் திருத்தலம் அமைந்துள்ளது.
தாலுகா: குளித்தலை
வரலாறு :
காவிரியின் தென்கரையிலுள்ள பாடல் பெற்ற சிவத்தலங்களில், திருப்பராய்த்துறை பராய்த்துறைநாதர் கோவில், திருச்சி மாவட்டத்திலுள்ள குளித்தலையில் அமைந்துள்ளது. இது 2000 ஆண்டுகள் பழமை கொண்ட தொன்மையான ஆலயங்களில் ஒன்றாகும். சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 66வது தேவாரத்தலம் ஆகும்.
தல வரலாறு :
முன்னொரு காலத்தில் இப்பகுதியில் வசித்த வந்த ரிஷிகள் அனைவரும் தாங்களே அனைத்திலும் உயர்ந்தவர் என்று கர்வமும், ரிஷிகளின் மனைவியர்கள் தாங்களே அனைவரிலும் அழகானவர்கள், கற்புக்கரசிகள் என்று ஆணவமும் கொண்டிருந்தனர்.
இதைக்கண்ட சிவனும், மகாவிஷ்ணுவும் அவர்களுக்கு பாடம் புகட்ட எண்ணினர். சிவன் காண்போரைக் கவரும் பேரழகுடன் பிட்சாடனராக கையில் திருவோடு ஏந்திக் கொண்டார்.
மகாவிஷ்ணு அழகே உருவான மோகினி எனும் பெண்ணாக மாறினார். இருவரும் தாருகாவனம் வந்தனர். ரிஷிகள் பெண் வடிவில் இருந்த மகாவிஷ்ணுவின் அழகில் மயங்கி அவரை பின்தொடர்ந்தனர்.
சிவனது பேரழகைக்கண்டு வியந்த ரிஷிபத்தினிகள் தங்களது கற்பையும் மறந்து அவர் பின்னே சென்றனர். தங்கள் மனைவியர் திருவோடு ஏந்திய ஒருவனுடன் சென்றதைக் கண்ட ரிஷிகள், வந்திருப்பது ஏதோ மாயக்காரன் என்று நினைத்து அவரை தாருகாவனத்தை விட்டுச் செல்லும்படி விரட்டினர். சிவனும், மகாவிஷ்ணுவும் செல்ல மறுத்தனர். கோபம் கொண்ட ரிஷிகள் சிவனுடன் சண்டையிட்டனர். ரிஷிகள் ஏவிய விலங்குகளையும், எய்த ஆயுதங்களையுமே தன் உடலில் ஏந்திக் கொண்டார் சிவன்.
சிவனை அழிக்க முடியாமல் மகரிஷிகள் குழம்பி நின்றனர். சிவன் அவர்கள் முன்பு பேரழகனாக காட்சி தந்தார். தம் தவறுகளை உணர்ந்த மகரிஷிகள் தங்களை மன்னிக்கும்படி வேண்டினர். சிவன் அவர்களை மன்னித்தருளி, சுயம்புலிங்கமாக தோன்றினார்.
தல பெருமை :
பிட்சாடனராக வந்த சிவன் அர்த்த மண்டபத்தில் உற்சவர் வடிவில் அருள்பாலிக்கிறார். முன்மண்டபத்தில் 12 ராசிகள் குறித்த கட்டம் மேல் விதானத்தில் இருக்கிறது.
இக்கோவிலுள்ள நவகிரகங்களுள் சனிபகவானுக்கு மட்டுமே வாகனம் உள்ளது, மற்ற கடவுள்களுக்கு வாகனம் கிடையாது.
பிரகாரத்தில் முருகன் வள்ளி, தெய்வானையுடன் தனிச்சன்னதியில் இருக்கிறார். இவருக்கு அருகில் மற்றொரு சன்னதியில் இருக்கும் தண்டாயுதபாணி செருப்பு அணிந்த கோலத்தில் இருக்கிறார்.
பிரார்த்தனை :
இந்த சிவனை வணங்கிட தோல் நோய், புற்றுநோய் நீங்கும், பேச்சு வராத குழந்தைகளுக்கு பேச்சு வரும், அம்பாளை வேண்டிக்கொள்ள திருமண பாக்கியம் கிடைக்கும் என்று கூறுகிறார்கள்.
இருப்பிடம் :
திருச்சியில் இருந்து கரூர் செல்லும் சாலையில் 15 கி.மீ. தூரத்தில் திருப்பராய்த்துறை தலம் இருக்கிறது.
கருத்துகள் இல்லை