வீடுகட்டும் முன் - பஞ்சாயத்து மனைக்கான அங்கீகாரம் பெறுவது எப்படி?
* நீங்கள் நகரத்தை ஒட்டிய புறநகர்ப் பகுதியிலோ (அல்லது) கிராமத்தை ஒட்டிய பகுதியிலோ மனை வாங்க விரும்புகிறீர்களா?ஆம் என்றால், குறைந்த விலையில் கிடைக்கிறது என்பதற்காக மனைக்கான அங்கீகாரத்தில் எக்காரணம் கொண்டும் சமரசம் செய்து கொள்ளாதீர்கள். அங்கீகாரம் இல்லாத மனையை வாங்கினால் பின்னர் அஞ்சும் நிலை ஏற்படலாம்.
* நகரங்களில் இன்று காலி மனைகளைக் காண்பதே பெரிதாகிவிட்டது. வீட்டுத் தேவை அதிகரித்து வரும் இந்தக் காலத்தில் நகரங்களுக்குள் வீட்டு மனை கிடைப்பதும் குதிரைக் கொம்பாகிவிட்டது.
* எனவே நகரத்தை ஒட்டிய புறநகர்ப் பகுதிகள் (அல்லது) கிராமங்களில்தான் மனைகளைத் தேடி மக்கள் செல்கிறார்கள். ஆனால், பல மனைகளை முறையாக அரசின் அனுமதி பெறாமல் விற்கப்பட்டு விடுவதால், மனை வாங்கியவர்கள் பல சிக்கல்களை எதிர்கொள்கிறார்கள்.
* தமிழகத்தில், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (CMDA), நகர ஊரமைப்பு இயக்ககம் (DTCP) ஆகிய இரண்டு அமைப்புகள் மட்டுமே வீட்டு மனை லே-அவுட்களுக்கு (Layout) அனுமதி வழங்கும் அதிகாரத்தைக் கொண்டுள்ளன.
* பஞ்சாயத்துத் தலைவர்களுக்கு எந்த லே-அவுட்டுக்கும் (Layout) நேரடியாக அனுமதி வழங்கும் அதிகாரம் இல்லை. இந்த விபரம் பலருக்கும் இன்னும் சரியாகத் தெரிவதில்லை. குறைந்த விலையில் கிடைக்கிறது என்று நினைத்துக்கொண்டு பஞ்சாயத்து அங்கீகார மனையை வாங்கிவிடுகிறார்கள்.
* இப்படி வாங்கிய மனையில் வீடு கட்ட அனுமதிக்கும்போதுதான் சிக்கல்கள் ஏற்படுகின்றன. சி.எம்.டி.ஏ. (CMDA), டி.டி.சி.பி. (DTCP) அங்கீகாரம் இல்லாமல் எந்தக் கட்டிட அனுமதியும் வழங்குவதில்லை மற்றும் வங்கிகளும் வீட்டுக் கடன் கொடுப்பதில்லை. எனவே மனையை வாங்கி வைத்துவிட்டு பலரும் அவதிப்படுகிறார்கள். இந்தப் பிரச்சனையிலிருந்து தப்பிக்க சில வழிமுறைகள் உள்ளன.
* இதுபற்றி அரசு சொல்லும் வழிமுறைகளைப் பின்பற்றினால் சிக்கல் இல்லாத மனைகளை வாங்கிவிடலாம். அரசு சொல்லும் வழிமுறைகள் என்ன என்பதை கீழே காண்போம்.
* மனைகளைப் பிரித்து லே-அவுட் (Layout) போட்டு விற்பனை செய்யும் புரோமோட்டர்கள் (Promoters), பிரதான சாலைக்குக் குறைந்தபட்சம் 30 அடி அகலம், குறுக்குச் சாலை என்றால் குறைந்தபட்சம் 21 அடி அகலத்தில் அமைக்க வேண்டும்.
* வீட்டு மனைகளில் தெருக்களின் சாலை வசதி, வடிகால் வசதி, தெரு விளக்குகள், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஆகிய வசதிகள் செய்து தரப்பட வேண்டும். புரோமோட்டர்கள் (Promoters) இதை அமைக்காமல் இருந்தால், இவற்றை அமைக்கச் சம்பந்தப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலகத்தில் இதற்கான அபிவிருத்திக் கட்டணத்தை மனை விற்பனை செய்பவர்களைச் செலுத்த சொல்வது வழக்கம்.
* மொத்த மனைப் பிரிவில் 10 சதவீத நிலத்தை சம்பந்தப்பட்ட கிராம ஊராட்சிக்கு புரோமோட்டர் (Promoters) தான பத்திரம் எழுதி பதிவு செய்து கொடுக்க வேண்டும். இதன் பிறகு இந்த 10 சதவீத பகுதிக்கும் புரோமோட்டருக்கும் (Promoters) தொடர்பு இல்லை என்றாகிவிடும்.
* சம்பந்தப்பட்ட வீட்டு மனை பிரிவு எதிர்காலத்தில் வளர்ச்சி அடையலாம் அல்லவா? அப்போது அந்தப் பகுதியில் அரசின் சார்பில் அங்கன்வாடி மையம், சமுதாயக் கூடம், நியாய விலை கடை மற்றும் அரசு துறையின் கீழ் வரும் இதர கட்டிடங்கள் கட்ட இந்த 10 சதவீத இடத்தை ஊராட்சி நிர்வாகம் பயன்படுத்திக்கொள்ளும்.
விண்ணப்பிப்பதற்கான தகுதிகள் :
* தமிழகத்தில் சுமார் 27,000 அங்கீகாரமில்லாத லே-அவுட்டுகளில் சுமார் 13.5 லட்சம் மனைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 20.10.16-க்கு முன் மனையை பதிவு செய்திருந்தால் மனைகளின் உரிமையாளர்கள், அதனை இப்போது யாருக்கு வேண்டுமானாலும் விற்கலாம்.
* இந்த மனைகளை வாங்குபவர்களும் யாருக்கு வேண்டுமானலும் விற்பனை செய்யலாம். ஆனால் பிற்காலத்தில் வீடு கட்டும்போது, ஒப்புதல் மனை என்கிற அங்கீகாரம் தேவைப்படும்.
* அப்போது, மனையின் உரிமையாளர் அல்லது லே-அவுட் போட்டிருப்பவர், தங்களுடைய மனையை முறைப்படுத்தக்கோரி விண்ணப்பிக்கலாம். இதற்கு அந்த லே-அவுட்டின் உரிமையாளர், 20.10.16-க்கு முன் ஒரு மனையையாவது பதிவு செய்து தந்திருக்க வேண்டும்.
* அங்கீகாரம் பெறாத மனைகளுக்கு அங்கீகாரம் கொடுக்க அந்த மனையானது அனைவருக்கும் உரிமையுள்ள பொதுச் சாலையில் அமையப் பெற்றிருக்க வேண்டும் என்ற விதிமுறையைத் தளர்த்தி, பொதுச் சாலையிலிருந்து மனையை இணைக்கும் வழிப்பாதையைப் பயன்படுத்த மனை உரிமையாளருக்கு உரிமை இருந்தால் போதும் என இப்போது மாற்றப்பட்டுள்ளது.
* அங்கீகாரம் பெறாத லே-அவுட்டுகளில், ஏற்கெனவே 20.10.16 தேதிக்குள் பத்திரப்பதிவு செய்தது, அந்த லே-அவுட்டில் மூன்றில் இரண்டு பங்காக இருக்க வேண்டும் என்று ஆரம்பத்தில் விதிமுறை வகுக்கப்பட்டது. அது 20.10.16-க்குள் ஒரு லே-அவுட்டில் ஒரே ஒரு மனை கிரயம் செய்யப்பட்டிருந்தால் கூட முழுமையாக அந்த மனைப் பிரிவையே டி.டி.சி.பி மூலம் முறைப்படுத்தலாம் என விதிமுறை மாற்றப்பட்டிருக்கிறது. மேலும், திறந்தவெளி ஒதுக்கீட்டுக் கட்டணம் நீக்கப்பட்டு உள்ளது.
அதிகக் கட்டணங்கள் :
* தற்போதைய நிலையில், மேம்பாட்டுக் கட்டணம் (Development charge), ஒழுங்கு முறைக் கட்டணம் (Regularisation Charge) மற்றும் சீராய்வுக் கட்டணம் (Scrutiny Fees) ஆகிய மூன்று கட்டணங்களைச் செலுத்த வேண்டும். இந்தக் கட்டணங்களை சுருக்கமாகப் பார்ப்போம்.
மேம்பாட்டுக் கட்டணம் :
* மேம்பாட்டுக் கட்டணம், மனை அமைந்திருக்கும் பகுதியைப் பொறுத்து ஒரு சதுர மீட்டருக்கு மாநகராட்சி எனில் ரூ.500-ம், சிறப்பு மற்றும் தேர்வுநிலை மாநகராட்சி எனில் ரூ.250, முதல்நிலை மற்றும் இரண்டாம் நிலை மாநகராட்சி எனில் ரூ.150, நகர பஞ்சாயத்து எனில் ரூ.75, கிராமப் பஞ்சாயத்து எனில் ரூ.25 வசூலிக்கப்படுகிறது.
* இப்படி வசூலிக்கப்படும் மேம்பாட்டுக் கட்டணம் அந்த உள்ளாட்சி அமைப்புகளின் தனிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டு குடிநீர், சாலை, தெரு விளக்குகள் போன்ற அடிப்படை வசதிகளை வழங்க செலவிடப்படும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
ஒழுங்குமுறைக் கட்டணம் :
* இக்கட்டணமும் மனை அமைந்திருக்கும் பகுதியைப் பொறுத்து, சதுர மீட்டருக்கு மாநகராட்சி எனில் ரூ.100, சிறப்பு மாநகராட்சி எனில் ரூ.60, முதல்நிலை மற்றும் இரண்டாம் நிலை மாநகராட்சி எனில் ரூ.60, நகரப் பஞ்சாயத்து எனில் ரூ.30, கிராமப் பஞ்சாயத்து எனில் ரூ.30 கட்ட வேண்டும்.
சீராய்வுக் கட்டணம் :
சீராய்வுக் கட்டணமாக மனை ஒன்றுக்கு ரூ.500 செலுத்த வேண்டும். ஒருவர் ஒரு லே-அவுட்டில் மூன்று சென்ட் வீதம் 10 மனைகள் என மொத்தம் 30 சென்ட் வாங்கியிருந்தால், அவர் சீராய்வுக் கட்டணமாக மட்டுமே ரூ.5,000 செலுத்த வேண்டும்.
மாநகராட்சி பகுதியில் ஒருவர் 1,200 சதுர அடி மனையை டி.டி.சி.பி ஒப்புதல் மனையாக மாற்ற ரூ.67,700 கட்டணமாக செலுத்த வேண்டிவரும். இதுவே கிராமப் பஞ்சாயத்து என்றால் ரூ.6,500 கட்ட வேண்டும். இதுதவிர, அதிகாரிகளை மனை இருக்கும் இடத்துக்கு அழைத்துவரும் செலவுகளும் இருக்கின்றன.
விண்ணப்பிக்கும் முறை :
* மனைக்கான அங்கீகாரத்தைக் கோரும் விண்ணப்பத்தினை www.tnlayoutreg.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். இணையதளம் வழியாகப் படிவம்-1-யைப் பூர்த்தி செய்து கொள்ள வேண்டும். அவ்வாறு விண்ணப்பிக்கும்போது சீராய்வுக் கட்டணமாக ரூ.500 இணையம் மூலம் செலுத்த வேண்டும். இப்படி விண்ணப்பித்தபின், நாம் விண்ணப்பித்ததற்கான பதிவுச்சீட்டு சான்று இணையத்தில் வழங்கப்படும். அப்பதிவுச் சீட்டினைப் பெற்று, அதிலிருந்து 30 நாள்களுக்குள் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளிடம் பின்வரும் ஆவணங்களுடன் சமர்ப்பிக்க வேண்டும்.
* விண்ணப்பதாரரின் பெயரில் உள்ள கிரயப் பத்திரம், விண்ணப்பதாரரின் பெயரில் பெறப்பட்ட பட்டா அல்லது முந்தைய உரிமையாளரின் பெயரில் பெறப்பட்ட பட்டா. விண்ணப்பம் செய்யப்படும் நாளன்று, ஒரு வார காலத்திற்கு முன்பு வரை உள்ள நிலை தொடர்பாக சார்பதிவாளரிடமிருந்து பெறப்பட்ட வில்லங்கச் சான்று.
* மனையானது விவசாய பகுதிக்குள் அமைந்திருந்தால், சம்பந்தப்பட்ட தாசில்தாரிடம் நீர்வழிப் போக்குவரத்து, வெள்ளம் போன்ற பாதிப்பு குறித்து சான்று பெறப்பட வேண்டும்.
* மனைப் பிரிவைச் சுற்றி பொது உபயோகச் சாலையை இணைக்கும் மற்றும் சுற்றியுள்ள அபிவிருத்திகள் குறிப்பிட்டு, சுற்றுச்சார்பு வரைபடம் (Topo Sketch) இணைக்கப்பட வேண்டும்.
* லே-அவுட்டின் (Layout) வரைபடம், எல்லை அளவுகள் குறிப்பிடப்பட்டு மனையின் உட்பிரிவு காட்டப்பட்டு மனையைச் சுற்றியுள்ள சாலையின் அளவுகள் குறிப்பிடப்பட்டு, உரிமம் பெற்ற சர்வேயர் கையொப்பமிட்டு வழங்கும் இட அமைப்பு வரைபடம் (FMB – Field Measurement Book) இணைக்கப்பட்டு இருக்க வேண்டும்.
* நமது லே-அவுட் அரசின் விதிகளுக்கு உட்பட்டு சரியாக இருந்தால், முறைப்படுத்தும் அதிகாரி அதற்கான ஒப்புதலை வழங்கி, பிற கட்டணங்களைச் செலுத்துவதற்காக உத்தரவிடுவார். அதிலிருந்து 30 நாள்களுக்குள் அனைத்துக் கட்டணங்களையும் நாம் செலுத்தியபின், முறைப்படுத்திய தொடர்பான ஆணை வழங்கப்படும்.
* மனைபிரிவு அமைவிடத்தை பற்றிய விவரங்களை எடுத்துகொண்டு டிடிசிபி அலுவலகம் சென்று டிடிசிபி அங்கீகாரம் மேற்படி இடத்திற்கு கிடைக்குமா? கிடைக்காதா? என்று டிடிசிபி அலுவலகத்திடம் தோராய கருத்துரை வாங்க வேண்டும்.
* அதாவது மேற்படி இடம் டிடிசிபி அங்கீகாரம் தடை செய்யப்பட்ட பகுதியில் வருகிறதா? டிடிசிபியின் LPA லிமிட்டுகுள் வருகிறதா?அல்லது Regional எல்லைக்குள் வருகிறதா? போன்ற கருத்துரை வாங்க வேண்டும்.
* தடை செய்யபட்ட பகுதிகள் என்பது மயானத்திற்கு மிக அருகில், நீர்நிலைக்கு மிக அருகில் உள்ள மலைபகுதிகள், குவாரிகள், விமானநிலையங்கள், இரயில்நிலையங்கள் அருகில், பறவைகள் சரணாலயம், ரிசர்வ் காடுகள் போன்று ஒவ்வொரு டிடிசிபி மண்டலத்திலும் ஒவ்வொரு விதமாக தடைசெய்யபட்ட பகுதிகள் இருக்க வாய்ப்பு இருக்கிறது.
* அடுத்ததாக மனைபிரிவுக்கான இடம் பஞ்சாயத்து, வட்டார, மாவட்ட, மாநில,தேசிய சாலைகளுடன் ஒட்டி வருகிறதா என்று பார்க்க வேண்டும். அவ்வாறு வந்தால் சிறப்பு, அவ்வாறு வரவில்லை எனில் அரசு சாலைக்கும் உருவாக்க இருக்கும் மனைபிரிவிற்கும் இடைப்பட்ட தூரத்திற்கு 30அடி சாலை நாமே உருவாக்க வேண்டும்.
* ஏற்கனவே அரசு சாலை இருந்தால் அது வருவாய்துறை FMB யில் தனி உட்பிரிவு சர்வே எண் கொடுத்து புலப்படம் தனியாக வரைந்து காட்டப்பட்டு இருக்கும். அரசு சாலை இடத்துடன் ஒட்டி இல்லாத நிலையில் நாமே உருவாக்கும் சாலை உருவாகும் மனைபிரிவிற்கும், அங்கு இருக்கும் அரசு சாலைக்கும் இணைக்கப்படும் தூரத்தை FMB-யில் தனியாக உட்பிரிவு செய்து வரைபடம் FMB-யில் கட் செய்ய வேண்டும்.
* அடுத்து மனைபிரிவு உருவாகும் இடத்தின் FMB மற்றும் அதனை சுற்றி இருக்கிற புலபடத்தின் FMB, டோபோ ஸ்கெட்ச், பட்டா, சிட்டா, அ-பதிவேடு அனைத்தும் VAO-வின் கையெழுத்து மற்றும் முத்திரையுடன் நகல்கள் பெறவேண்டும்.
* அரசு வழக்கறிஞர் அல்லது அதற்கு இணையான வழக்கறிஞரிடம் மனைபிரிவு உருவாகும் இடத்தின் ஆவணங்களை கொடுத்து சட்ட கருத்துரை அவருடைய லெட்டர் பேடில் வாங்க வேண்டும்.
* நல்ல சிவில் இன்ஜீனியரை வைத்து மனைபிரிவு FMB-க்களை கிளப் செய்து உத்தேச மனை பிரிவிற்கான வரைபடம் வரைந்து கொள்ளவும்.
* VAO கையெழுத்திட்ட ஆவணங்கள் வழக்கறிஞர் கொடுத்த சட்டக்கருத்துரையுடன் கூடிய நிலத்தின் ஆவணங்கள் இன்ஜினியரால் வரையப்பட்ட உத்தேச வரைபடம் ஆகியவற்றை இணைத்து DTCP ஆபிஸ்க்கு டிடிசிபி அங்கீகாரம் வேண்டி ஒரு மனு எழுதி சமர்பிக்க வேண்டும்.
* மனு செய்த பிறகு BDO-க்கும் மாவட்ட வேளாண்மை அலுவலகத்திற்கும் வட்டாட்சியருக்கும் தடையின்மை சான்று (NOC) கேட்டு டிடிசிபி அலுவலகம் forward செய்வார்கள். அதனுடைய நகல் தங்களுக்கு வரும், அதனை எடுத்துக்கொண்டு மேற்படி அலுவலகம் சென்று நாம் பின்தொடரல் செய்தல் வேண்டும்.
தாசில்தார் இடம் வாங்க வேண்டிய தடையின்மை சான்றுகள் (NOC):
* நில உச்சவரம்பு இல்லை என்கிற தடையின்மை சான்று (NOC).
* நில ஆர்ஜிதம் இல்லை என்கிற தடையின்மை சான்று (NOC).
* இதில் புறம்போக்கு நிலம் ஏதும் இல்லை என்கிற தடையின்மை சான்று (NOC).
* இதில் வருவாய்துறை சிக்கல்கள் தடை ஆணைகள் ஏதும் இல்லை என்கிற தடையின்மை சான்று (NOC).
* மேற்படி சான்றுக்காக தாசில்தார், துணைதாசில்தார் (D.T) வருவாய் ஆய்வாளர் (RI), கிராம நிர்வாக அலுவலர் (VAO) என்று படிநிலையாக இறங்கி மீண்டும் VAO, RI, DT, தாசில்தார் என படிநிலையாக ஏறி NOC சான்று பெற வேண்டும்.
கருத்துகள் இல்லை