* மாவட்டம் : திருப்பூர்
* இடம் : அழகுமலை
* முகவரி : அலகுமலை கிராமம், வானவஞ்சேரி, திருப்பூர்.
* தாலுகா : பொங்கலூர்
வரலாறு :
வாமனஞ்சேரியில் சுயம்புவாக அருள்மிகு வலுப்பூரம்மன் எழுந்தருளியுள்ளார். கோவில் முழுவதும் கல் வேலைப்பாடுகளுடன், கருவறை, முன் மண்டபம், மகா மண்டபம் என மூன்று நிலைகளில் அமைந்துள்ளது. இங்கு அம்மன் சாந்த சொரூபிணியாக காட்சியளிக்கிறார்.
தல வரலாறு :
1,200 ஆண்டுக்கு முன்பு, சோழ நாட்டை ஆண்ட விக்ரமசோழ மகாராஜாவின் மகளுக்கு வலிப்பு நோய் ஏற்பட்டது. சிறந்த மருந்துவ சிகிச்சை அளித்த பின்பும் மகாராஜாவின் மகளுக்கு நோய் தீரவில்லை. நோய் தீர வேண்டும் என்பதற்காக அனுபவம் வாய்ந்த பண்டிதர்களிடம் கேட்ட போது கொங்கு மண்டலத்தில் மேலைசிதம்பரத்திற்கு சென்று வழிபட்டு வந்தால் நோய் தீரும் என்று ஆலோசனை கூறினார்கள். அதேபோல் மகாராஜாவும் தன் மகளை அழைத்துக் கொண்டு செல்கிறார். செல்லும் வழியில் வாமனஞ்சேரியில், தங்கியிருந்த போது, மன்னர் கனவில் அம்மன் தோன்றி, உனது மகள் நோய் தீர வேட்கோவரிடம் சென்று, திருநீறு வாங்கிக்கொள் என கூறுகிறார். அதே போல், இங்கு அம்மனை வழிபட்டு, திருநீறு வாங்கி, மகளுக்கு பூசுகிறார். மகளுக்கும் தீராத நோய் தீருகிறது. அதன் பிறகு, பச்சை மண் பிடித்து, வலுப்பூரி அம்மனாக பிரதிஷ்டை செய்து, மன்னர் வழிபடுகிறார். இவ்வாறு, வாமனஞ்சேரியில் சுயம்புவாக எழுந்தருளினார் வலுப்பூரம்மன். மக்களின் நோய் பிணி நீக்கும், அற்புத சக்தியாக அருள்பாலித்து வருகிறார். பல்வேறு நோய்கள் தீர்த்து வருவதாகவும், உடல் அங்கங்கள் பிரச்சனைக்கு தீர்வு, குழந்தை பேறு, திருமண தடை நீக்கும் அம்மனாக பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
தல பெருமை :
இக்கோவிலுக்கு வெளியில், ஆலமரத்திற்கு அடுத்து, சற்று தள்ளி தீபஸ்தம்பம் (குத்துவிளக்கு) அமைந்துள்ளது. இந்த தீபஸ்தம்பத்திலிருந்து, அம்மனை பார்த்தால் நேராக தெரியும் வகையில் அமைந்துள்ள அதிசயமான ஒன்றாகும். அம்மனுக்கு எதிரே, மிகப்பெரிய ஆலமரம் உள்ளது. இங்கு, அம்மன் ஊஞ்சல் காணப்படுகிறது. அந்த மரத்தில், திருமண தடை நீங்க தாலியை தொங்க விட்டும், குழந்தை பாக்கியம் வேண்டி தொட்டில், வளையல்கள் அணிவித்தும், பக்தர்கள் வழிபடுகின்றனர். மேலும், பல்வேறு உருவங்கள் பக்தர்களால் காணிக்கையாக செலுத்தப்படுகிறது. கால், கை, உடல் என பல்வேறு வடிவங்களில் உருவங்கள் காணப்படுகின்றன.
பிரார்த்தனை :
பக்தர்கள் நோய் நிவர்த்தியானதும், உருவாரங்கள் செய்து வைத்தும், சேவல், ஆடு பலி கொடுத்தும், பறக்க விட்டும் நன்றிக்கடன் செலுத்துகின்றனர்.
இருப்பிடம் :
திருப்பூர், பழைய பஸ் ஸ்டாண்டிலிருந்து 18 கி.மீ. தூரத்திலும், திருப்பூர் ரயில்வே ஸ்டேஷனிலிருந்து 20 கி.மீ. தூரத்திலும் இத்திருத்தலம் அமைந்துள்ளது.
கருத்துகள் இல்லை