வீடுகட்டும் முன் - கட்டிட பொருட்கள் வாங்குவதற்கு முன் கவனிக்க வேண்டிய முக்கிய குறிப்புகள்
சொந்த வீடு கட்ட வேண்டும் எனத் தீர்க்கமாக முடிவெடுத்த பிறகுதான் நமக்கு அதை எப்படி கட்டப் போகிறோம் என பல குழப்பங்கள் வரும். வீடு என்பது நம் வாழ்க்கையின் ஓர் அங்கமாக இருக்கப்போவது. அதற்கு உயிர் இல்லை என்றாலும் நமது மன ஆரோக்கியத்திற்கும் உடல் ஆரோக்கியத்திற்கும் அதன் பங்கு முக்கியமானது. வீடு என்னும் நண்பன் ஒழுங்காக இருந்தால் தான் வாழ்க்கை என்னும் பாதையில் நம்மால் ஆற்றலுடன் வாழ்க்கையில் பயணிக்க முடியும்.
கட்டிடப் பொருட்கள் வாங்குவதற்கு முன் கவனிக்க வேண்டியவைகள் :
தண்ணீர் :
* கட்டிடப் பணிகளுக்குத் தண்ணீரின் தரம் முக்கியமானது. உப்புச் சுவை உள்ள தண்ணீர் என்றால் அது கட்டிடத்தின் உறுதிக்குப் பங்கம் விளைவிக்கும். அதனால் கட்டிடப் பணிகளுக்கு நல்ல தண்ணீர் உபயோகிக்க வேண்டும். அதனால் முதலில் தண்ணீர் சம்மந்தமான தேவையை கவனிக்க வேண்டும். கட்டிடப் பணிகளுக்காக முதலில் ஆழ்துளைக் கிணறு அமைத்துக்கொள்ள வேண்டும். ஒருவேளை ஆழ்துளைக் கிணற்றில் தண்ணீர் இல்லையெனில் வேறவொரு கிணறு அமைக்கும் முன்னர் ஏற்கனவே உள்ள தண்ணீரில்லாத ஆழ்துளைக் கிணற்றை விரைவாக மூடிவிட வேண்டும். இதன் மூலம் பின்னாளில் ஏற்படும் எதிர்பாராத விபத்துக்களிலிருந்து நம்மைக் காத்துக் கொள்ளலாம்.
செங்கல் :
* வீட்டின் உறுதியை நிர்ணயிப்பதில் செங்கற்களுக்குப் பிரதான இடம் உண்டு. பாரம்பரிய முறையிலான சூளை மற்றும் நவீன முறையிலான சேம்பர் என இரண்டு வகையில் செங்கற்கள் தயாரிக்கப்படுகின்றன. இரண்டு தயாரிப்புகளையுமே வாங்கிப் பயன்படுத்தலாம்.
சிமெண்ட் :
* கட்டிடத்தின் உறுதிக்கான மற்றொரு விஷயங்களில் ஒன்று, சிமெண்ட். அந்த சிமெண்டின் தரத்தை அதன் நிறத்தை வைத்தே ஒரளவு தீர்மானித்துவிடலாம். லேசான பச்சை நிறத்தில் இருந்தால் அது நல்ல சிமெண்ட் என ஊகித்துக்கொள்ளலாம். அதுபோல சிமெண்ட் மூட்டைக்குள் கை விடும்போது குளுமையாக இருந்தால் அது சிறந்த தரம் என அறிந்துகொள்ளலாம்.
* சிமெண்டின் தரத்தை அறிய மற்றொரு முறை, அதைத் தண்ணீருக்குள் இடும்போது அது மிதந்தால் தரம் சரியில்லை என அறிந்துகொள்ள முடியும். சிமெண்ட் மூட்டையின் அளவு 50 கிலோ. அது சரியாக இருக்கிறதா எனச் சரிபார்த்துக்கொள்ள வேண்டும். ஓரளவு குறைவாக இருந்தால் சரி. 1 கிலோவுக்கும் அதிகமாகக் குறைந்திருந்தால் அதை வாங்கிய இடத்தில் கொடுத்து மாற்றிக்கொள்ள வேண்டும்.
மணல் :
* இன்றைக்குத் தங்கத்தைப் போல விலை மதிப்பான பொருளாக மணல் மாறிவிட்டது. விலை மதிப்பு அதிகமாக அதிகமாக அதில் கலப்படம் வந்துவிடும் அல்லவா? ஆற்று மணலில் தூசியைக் கலக்கிறார்கள். சிலர் ஆற்று மணலுடன் கடல் மணலைக் கலக்கிறார்கள். அதனால் ஆற்று மணலை முறையாகப் பார்த்து வாங்க வேண்டும். கடல் மணலைக் கண்டுபிடிக்க மணலின் உப்புச் சுவையைப் பரிசோதித்தாலே போதும். கடல் மணலில் உப்புச் சத்து அதிகமாக இருக்கும். மணலில் அதிகமாகக் குருணை இருந்தால் பயன்படுத்தத் தகுதியில்லாததாக இருக்கும். குருணை அதிகமாக உள்ள மணல் சிமெண்டுடன் கலக்காது.
கம்பிகள் :
* இப்போதுள்ள நவீனத் தொழில்நுட்பத்தைத் துணிச்சலாகப் பயன்படுத்த வேண்டும். அதனால் நேரமும் கூலியும் மிச்சமாகும். உதாரணமாக ரெடிமேட் கட்டுமானக் கம்பிகள் இப்போது சந்தையில் கிடைக்கின்றன. கட்டிடத்தின் வரைபடத்திற்குத் தகுந்தாற்போல் அவர்களே கம்பியை வளைத்துக் கொண்டு வந்து இடத்திலேயே இறக்கிவிடுவார்கள். முன்புபோலக் கட்டுமான இடத்தில் தனியான இடத்தை நிர்மானித்துக் கம்பிகளை வளைத்துக்கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை.
* அதுபோல சிமெண்ட் கலவையிலும் தேவையான அளவு ரெடி மிக்ஸைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
பொதுவானவை :
* கட்டுமானத்திற்குப் பிரித்துப் பார்க்க முடியாத அளவில் உறுதியும் உருவமும் தருவது செங்கல். இதன் தரத்தை அறிய ஓர் எளிய வழிமுறை பின்பற்றப்படுகிறது. நாலைந்து செங்கற்களை எடுத்து நீரினுள் இட வேண்டும். 24 மணி நேரத்திற்குப் பிறகு அதை எடுத்து விரலால் சுரண்டிப் பாருங்கள் பிசிறு பிசிறாக வந்தால் அந்தச் செங்கற்கள் தரம் குறைவானவை என அறிந்துகொள்ளலாம்.
* இப்போது பலவகையான மாற்றுச் செங்கற்கள் சந்தையில் கிடைக்கின்றன. அவற்றைப் பயன்படுத்தினால் விலையும் மிச்சமாகும், தரத்திலும் சிறந்தவையாக இருக்கும். தேவையைப் பொறுத்து, அதற்கு தகுந்த கற்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
* சுற்றுச் சுவர்களுக்கு ஹாலோ செங்கல் மிகவும் உகந்தவையாக இருக்கும். இப்போது வீடு கட்டுவதற்கும் இவ்வகையான மாற்றுச் செங்கற்களைப் பயன்படுத்துவது நல்லது எனப் பசுமைக் கட்டிட நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள்.
* பாரம்பரிய முறையிலான செங்கற்கள் தயாரிக்க ஆகும் ஆற்றலால் சுற்றுச் சூழல் மாசுபடுகிறது. அவற்றுடன் ஒப்பிடும்போது மாற்றுச் செங்கற்கள் சுற்றுச் சூழலுக்கு உகந்தவை. அதனால் கூடியவரை நாம் மாற்றுச் செங்கற்களைக் கட்டிடப் பணிகளுக்குப் பயன்படுத்துவோம்.
* கட்டுமானப் பொருள்களைக் கையாளும்போது அவற்றில் சிறிதளவு வீணாகக்கூடும். அவை சிறிய அளவாக இருந்தால் சரி. அப்படியில்லாமல் அஜாக்கிரதையாகக் கட்டுமானப் பொருள்களை கையாண்டு அதன் மூலம் ஆகும் கட்டுமானச் சேதாரத்திற்கு நாம் பொறுப்பாக வேண்டிய அவசியமில்லை. அதனால் பணிகள் நடக்கும் இடத்திலிருந்து சேதாரத்தைக் கண்காணிக்க வேண்டும். கட்டுமானப் பொருள்களின் சேதாரம் என ஒப்பந்தக்காரர்கள் கூறினால் அதைச் சோதித்துப் பார்க்க வேண்டும்.
* கான்கிரீட்டுக்கு வலுச் சேர்க்க இரும்புக் கம்பிகள் பயன்படுத்தப்படுகின்றன. இவ்வகைக் கம்பிகளைப் பயன்படுத்தும் போது சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். கம்பிகளில் உள்ள பிசிறுகளை நீக்கிவிட்டே பயன்படுத்த வேண்டும். துரு இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். கம்பியின் மீது எவ்விதமான கறையும் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அதாவது அடையாளத்திற்காக கம்பிகள் மீது பெயிண்ட் அடித்திருக்கக்கூடும். அதுபோல எண்ணெய்க் கறை, சேறு இதுபோன்ற கறைகளையும் நீக்க வேண்டும். இம்மாதிரியான கறைகளுடன் கம்பியைக் கட்டிடப் பணிகளுக்கு உபயோகித்தால் கம்பி, சிமெண்டுடன் வலுவான பிணைப்பை உண்டாக்காமல் போய்விடும்.
* மின்சார இணைப்பைப் பொறுத்தவரை தரமுள்ள வயர்களை வாங்குங்கள். விலை குறைவாகக் கிடைக்கிறது என்று அதிக ஆற்றல் கடத்தாமல் வீணாகும் வயர்களை வாங்காதீர்கள். அதனால் மின்சாரம் வீணாகி நாட்டுக்கும் வீட்டுக்கும் நஷ்டம் உண்டாகும்.
* சுவிட்சுகளின் விஷயத்திலும் கவனம் தேவை. மலிவான வகை சுவிட்சுகள் விபத்தை உண்டாக்கக் கூடியவையாக இருக்கும். வீட்டுக்கு விளக்குகளை அமைக்கும்போது முன்கூட்டியே திட்டமிடுங்கள். அறைக்குத் தகுந்தவாறு வண்ண விளக்குகளை அமையுங்கள்.
* வீட்டுக்கான கதவுகள், ஜன்னல்கள் செய்யும்போது வீண் கவுரவத்திற்காக எல்லாவற்றையும் மரத்தால் செய்ய வேண்டாம். முக்கியமான நுழைவு வாயிலை மட்டும் மரத்தைக் கொண்டு செய்யலாம். ஜன்னல்களையும் மரத்தால் செய்யலாம். ஆனால் கழிவறைக் கதவு போன்றவற்றிற்கு ரெடிமேட் பிளாஸ்டிக் கதவுகளைப் பயன்படுத்தினாலேயே போதுமானது. மரப் பொருள்களின் பயன்பாடு வீடு கட்டுவதில் அதிகம் செலவு வைக்கக்கூடியது. அதனால் அதில் கவனமாக இருங்கள். அழகும் பாதுகாப்பும்தான் முக்கியமே தவிர ஆடம்பரம் அல்ல.
கருத்துகள் இல்லை