வீடுகட்டும் முன் - பவர் மூலம் சொத்து வாங்கும் போது கவனிக்க வேண்டியவைகள்
* சொத்து வாங்கும் போது பயன்படுத்தப்படும் ஆவணங்கள் வரிசையில் பவர் ஆப் அட்டர்னிக்கு (பொது அதிகார பத்திரம்) முக்கிய பங்கு இருக்கிறது.
* ஒருவர் தனது சொத்தை விற்பனை செய்வதற்கு தனது சார்பில் ஒருவரை நியமித்து அவருக்கு அதிகாரம் வழங்குவது தான் பவர் ஆப் அட்டர்னி எனப்படுகிறது.
* இந்த பவர் கொடுக்கும் அதிகாரத்திலும் சில வரைமுறைகள் இருக்கின்றன. அதிலும் சொத்தை விற்பனை செய்வதற்கு மட்டுமே பவர் எழுதிக்கொடுக்கப்படுவதில்லை.
பவர் அதிகாரம்
* சொத்தை வாங்குவதற்கும், சொத்தை நிர்வகிப்பதற்கும் பவர் அதிகாரம் கொடுக்கப்பட்டிருக்கும். முக்கியமாக சொத்தை விற்பதற்கு முந்தைய பரிவர்த்தனை நிலையான விற்பனை ஒப்பந்தம் போடுவதற்கு மட்டுமே அதிகாரம் வழங்கப்பட்டிருக்கலாம்.
* அப்படி இருந்தால் அவரிடம் இருந்து சொத்தை வாங்குவதற்கு முன்பு கவனிக்க வேண்டியவை, விற்பனை ஒப்பந்தம் போடுவதற்கு மட்டுமே அதிகாரம் கொடுக்கப்பட்டிருப்பவருக்கு நேரடியாக சொத்தை விற்பனை செய்யும் உரிமை கிடையாது.
* அவரால் சொத்தை விற்பனை செய்வது குறித்து ஒப்பந்தம் மட்டுமே போட்டுக் கொடுக்க முடியும். சொத்தை பத்திரப்பதிவு செய்வது தொடர்பாக விற்பனை ஆவணம் எழுதித்தர முடியாது. அதை மீறி அவர் உண்மைகளை மறைத்து விற்பனை ஆவணம் எழுதித் தந்தாலும் அது செல்லாது. ஆகையால் சொத்தை விற்பனை செய்பவர் பவர் வைத்திருந்தால் அந்த சொத்தை வாங்குவதற்கு அவசரப்பட்டு முடிவு எடுக்கக் கூடாது.
* பவர் பத்திரம் எழுதிக்கொடுப்பதில் பல வகைகள் உள்ளன. நிர்வகிக்க மட்டுமல்லாது அந்த நிலத்தின் விற்பனை உரிமையையும் ஒருவருக்கு எழுதிக் கொடுக்க முடியும். இந்த அடிப்படையில் தான் பவர் பத்திரம் மூலம் அடுக்குமாடிக் குடியிருப்புகள் இன்றைக்கு கட்டப்பட்டு விற்கப்படுகின்றன.
* இம்மாதிரியான பவர் பத்திரம் மூலம் நிலம் வாங்கும் போது கவனமாக இருக்க வேண்டியது அவசியம். விற்பனை அதிகாரம் சம்பந்தப்பட்ட நபருக்கு அளிக்கப்பட்டுள்ளதா என்பதைப் படித்துப் பார்த்த பிறகு தான் வாங்க வேண்டும்.
* எந்த வகை அதிகாரப் பத்திரமாக இருப்பினும் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அப்பத்திரத்தில் அதிகாரம் கொடுப்பவரும் அதிகாரம் பெறுபவரும் கையொப்பமிட வேண்டும். இரண்டு சாட்சிகளின் முன்னிலையில் இந்தப் பத்திரம் இயற்றப்படும். இந்த நால்வரின் தங்கும் முகவரிக்கான சான்று சமர்ப்பிக்க வேண்டியதும் அவசியம். இவர்களின் புகைப்படமும் அந்தப் பத்திரத்தில் இடம் பெற வேண்டும்.
* இதில் சரியாக இல்லை என்றாலும் நஷ்டம் அடையக் கூடும். பவர் பத்திரம் எழுதிக்கொடுத்த உரிமையாளரைச் சந்தித்து அந்த பவர் பத்திரம் குறித்து கேட்டுத் தெளிவு பெற வேண்டும்.
* பல ஆண்டுகளுக்கு முன்பு எழுதிக்கொடுத்த பவர் பத்திரம் ரத்து செய்யப்பட்டிருக்கலாம். ஒருவேளை உரிமையாளர் இறந்திருக்கவும் வாய்ப்பு இருக்கிறது.
* அப்படி இருக்கும் பட்சத்தில் பவர் பத்திரம் செல்லாததாகிவிடும். உரிமையாளர் உயிரோடு இருக்கும் வரைதான் பவர் பத்திரம் செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.
* ஸ்பெசல் பவர் ஆப் அட்டார்னி என்பது ஒரே ஒரு வேலையை மட்டும் செய்வதற்காக கொடுக்கும் பவர் பத்திரம் ஆகும்.
* ஜெனரல் பவர் ஆப் அட்டார்னி என்பது ஒன்றுக்கு மேற்பட்ட வேலையை செய்வதற்கு கொடுக்கப்படும் பவர் பத்திரம் ஆகும்.
* ஜெனரல் பவர் ஆப் அட்டார்னி நீதிமன்றத்தில் வழக்கு தொடர மனுதாரர் தனக்கு பதிலாக வேறு ஒரு நபரை ஏஜென்ட்டாக நியமித்து பவர் கொடுப்பது .
* வெளிநாட்டில் இருக்கும் ஒரு நபர் தனக்கு பதிலாக சொத்தை வாங்குவதற்கு ஒரு ஏஜென்ட்டை நியமித்து பவர் கொடுப்பது போன்றவை ஸ்பெசல் பவர் ஆப் அட்டார்னி .
* நீதிமன்றத்தில் வழக்கு போடுவதற்கு போடும் ஸ்பெசல் பவர் பத்திரம் என்பது ஒரே ஒரு வழக்குத்தான். ஆனால் அது தொடர்பாக பல வேலைகள் செய்ய வேண்டி இருந்தாலும் , அது ஒரு வேலையின் தொடர் வேலை என்பதால் அதுவும் ஒரு வேலை தான்.
* ஜெனரல் பவர் ஆப் அட்டார்னி, உதாரணமாக சொத்தை நிர்வகிக்க வரி செலுத்தி வர, அடமானம் வைத்து கொள்ள , அடமான பத்திரம் எழுதிக் கொடுக்க வாடகை & லீசுக்கு விட, கட்டிடம் கட்ட , ஒப்புதல் வாங்க, வாடகை வசூல் செய்ய, வாடகைதாரரை காலி செய்ய, கோர்ட்டில் வழக்கு தொடர வக்கீல் நியமிக்க, மற்ற இதர அரசு அலுவலங்களுக்கு சொத்து சம்பந்தமான வேலைகளை செய்ய என அனைத்து வேலைகளுக்கும் பவர் கொடுத்து ஏஜென்ட் வைத்து கொள்ளுதல் ஜெனரல் பவர் ஆப் அட்டார்னி ஆகும்.
* எதுவுமே குறிப்பிடாமல் இரண்டு நபருக்கு பவர் கொடுத்தால் இரண்டு பேரும் சேர்ந்தே அந்த வேலையை செய்து முடிக்க வேண்டிய கட்டாயம் இருக்கும் . ஆவணங்களில் இரு நபருமே கையெழுத்து இட வேண்டிய நிலை இருக்கும்.
* ஒருவரை ஏஜென்ட்டாக நியமித்து அவரை நீக்கமும் செய்யலாம், அதற்கு தனியாக பவர் ரத்து பத்திரம் ஒன்று எழுதி பத்திர அலுவலகத்தில் பதிய வேண்டும்.
* ஒரு ஏஜென்ட்டை நியமித்து அவரை நீக்கும் வரை அந்த ஏஜென்ட் செய்த எல்லா வேலைகளும் பவர் கொடுத்தவரை கட்டுபடுத்தும். ஏஜென்ட் செய்த வேலைகள் எல்லாம் சட்டப்படி பவர் கொடுத்தவர் செய்த வேலைகளாகவே கருதப்பட வேண்டும்.
* ஒரு ஏஜென்ட்டை நியமித்து விட்டு, அந்த ஏஜென்ட்டை நீக்கமால் பவர் எழுதி கொடுத்தவர் இறந்து விட்டாலோ, மனநிலை பாதிக்கபட்டாலோ, அந்த பவர் பத்திரம் செல்லாததாகி விடும்.
* ஒரு பவர் பத்திரத்தில் எழுதி கொடுப்பவர், எழுதி வாங்குபவரிடமிருந்து எந்த பணமும் வாங்கவில்லை என்ற உறுதிமொழியும் எழுதி இருக்க வேண்டும். பவர் பத்திரத்தில் பணபரிமாற்றம் நடைபெறுதல் காட்டக்கூடாது.
* பவர் எழுதி கொடுக்கும் நபர், நல்ல நபர்களை ஏஜென்ட்டாக வைக்கவில்லை என்றால் , பவர் கொடுக்கும் நபர் பெயரில் பணமோ அல்லது நிலமோ மோசடி செய்ய வாய்ப்பு இருக்கிறது. அதனால் பவர் கொடுத்தவரும் அலைக்கழிக்கப்படுவார்கள்.
கருத்துகள் இல்லை