பெண்களின் முன்னேற்றத்திற்காகவும், தனிநபர் வருமானம் பெருக்கும் நோக்கத்திலும், கிராம மட்டத்தில் 10-20 பெண்களுடன் ஏற்படுத்தப்பட்ட குழுவே மகளிர் சுய உதவிக்குழு ஆகும்.
மகளிர் திட்டத்தின் குறிக்கோள்:
தமிழகத்திலுள்ள அனைத்து ஏழை மகளிரையும், சமூகரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும், மேம்பாடு அடைய செய்தல், தாங்களாகவே தங்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்திக் கொள்ள செய்து "சுய சார்பு" நிலைய அடைய செய்வதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.
திட்டத்தில் பயன் பெறுவதற்கான தகுதிகள்:
* 18 முதல் 60 வயதிற்குட்பட்ட மகளிர்.
* மாற்றுதிறனாளிகளாக இருப்பின் 0 முதல் 60 வயதிற்குட்பட்டவர்கள்.
* 12 முதல் 20 மகளிரை ஒருங்கிணைத்து சுய உதவிக் குழுக்கள் அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.
* 5 முதல் 20 மாற்றுதிறனாளிகள், பழங்குடியின மக்கள் ஒருங்கிணைத்து சிறப்பு சுய உதவிக் குழுக்கள் அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.
* திட்ட செயல்பாட்டிற்கு முன்பு, இதற்கு முன் அமைக்கப்பட்டுள்ள சுய உதவிக்குழுக்களிலிருந்து விடுப்பட்டுள்ள ஏழை மகளிரை கண்டறிந்து புதிய சுய உதவிக்குழுக்கள் அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.
மகளிர் சுய உதவி குழுவின் அடிப்படை விதிமுறைகள்:
* சுய உதவிக் குழு உறுப்பினர்களின் தேர்வு, தகுதியின் அடிப்படையில், உரிய வகையில் செய்ய வேண்டும்.
* வங்கிக் கணக்கு (Bank SB / Ac) குழுவின் பெயரில் ஆரம்பிக்க வேண்டும்.
* குழுக் கூட்டம் வாரந்தோறும் குறிப்பிட்ட இடத்தில், குறிப்பிட்ட நேரத்தில், குறிப்பிட்ட நாளில், குழு உறுப்பினர்களின் வசதிக்கேற்ப நடத்த வேண்டும்.
* குழு உறுப்பினர்களின் தேவையின் அடிப்படையில், கடன் வழங்கப்பட வேண்டும்.
* குழுவால் நிர்ணயிக்கப்பட்ட தவணை மற்றும் வட்டியினை கடன் பெற்ற உறுப்பினர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
* கடன் பெற்ற உறுப்பினர்கள் கடனை குறிப்பிட்ட தவணைக்குள் வட்டியுடன் செலுத்த வேண்டும்.
* குழுப் பிரதிநிதி, உறுப்பினர்களை கொண்டு குழு செயல்பட வேண்டும்.
* சமூக கிராம மேம்பாட்டிற்கு குழு பாட வேண்டும்.
* குழுவின் விதிமுறைகளை மீறுபவர்களுக்கு உறுப்பினர்களால் நிர்ணயிக்கப்பட்ட தொகையினை அபராதமாக விதிக்கப்படும்.
* உறுப்பினர், பிரதிநிதி பொறுப்பானது சுழற்சி முறையில் இருக்க வேண்டும்.
* உறுப்பினர்கள் அவரவர் விருப்பப்படி சேமிப்புத் தொகைக் கட்டலாம். ஆனால், அது தொடர்ந்த சேமிப்பாக இருத்தல் வேண்டும்.
* குழுவில் இருக்கும் உறுப்பினர் தாமாக விலகினாலும் அல்லது நீக்கப்பட்டாலும் அவர் குழுவின் பொது நிதியில் உரிமை கோர முடியாது. அவரின் சேமிப்பு தொகை மட்டுமே திருப்பித் தரப்படும்.
* குழுக் கூட்டத்தின் இறுதியில் குழுவின் வரவு, செலவினை உறுப்பினர்களுக்கு தெரிவிக்க வேண்டும்.
* குழுவின் கையிருப்புத் தொகை ரூ.100 க்கு மேற்படாமல் இருத்தல் வேண்டும்.
* கூட்டத்தின் இறுதியில் உறுப்பினர்களிடம் இருந்து வசூலான பணத்தை அடுத்த நாளே வங்கியில் செலுத்த வேண்டும்.
மகளிர் சுய உதவிக்குழு பிரதிநிதிகளின் பொறுப்புகள்:
* தவறாமல் குழுக் கூட்டம் நடத்த ஊக்குனருடன் இணைந்து செயல்பட வேண்டும்.
* சேமிப்பு, கடன் மற்றும் பிற பணத்தை வசூல் செய்து வங்கியில் செலுத்த வேண்டும்.
* குழுவின் வங்கிக் கணக்கை ஊக்குனருடன் இணைந்து துவக்க மற்றும் இயக்க வேண்டும்.
* குழு உறுப்பினர்களுக்கு ஏற்ற பொறுப்புகளைப் பகிர்ந்து அளிக்க வேண்டும்.
* பயிற்சியில் பெற்ற கருத்துகளை உறுப்பினர்களிள் மத்தியில் பகிர்ந்து கொள்ள வேண்டும்.
* உறுப்பினர்களையும் பயிற்சியில், கூட்டங்களில் கலந்து கொள்ள ஆர்வமூட்ட வேண்டும்.
* ஊக்குனர் இல்லாத நேரத்தில் அவரின் பொறுப்பை ஏற்று நடத்த வேண்டும்.
* ஊக்குனருடன் இணைந்து குழுக் கணக்குப் பதிவேடுகளைப் பராமரிக்க வேண்டும்.
* பெற்ற கடனை முறையாக பயன்படுத்தவும், திருப்பி செலுத்தவும் முன் மாதிரியாக இருந்து உறுப்பினர்களை ஊக்கப்படுத்த வேண்டும்.
* பிரச்சனைகளுக்குத் தீர்வு காண வழி காட்ட வேண்டும்.
* உறுப்பினர்கள் குழுவின் விதிமுறைகளை மீறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
* குழுவின் பிரதிநிதியாக பஞ்சாயத்து / வட்டார அளவிலான குழுக் கூட்டமைப்புக் கூட்டங்களில் கலந்து கொள்ள வேண்டும்.
* அரசு மற்றும் பிற நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டு நலத் திட்டங்களைப் பெற உறுப்பினர்களை ஆர்வ மூட்ட வேண்டும்.
* சமூக மற்றும் கிராம வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்த உறுப்பினர்களை ஒருங்கிணைத்து வழி நடத்த வேண்டும்.
* குழுவிற்கு ஆதரவாகவும் நல்ல வழி நடத்துனராக செயல்பட வேண்டும்.
மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களின் பொறுப்புகள்:
* பொறுப்புமிக்க உறுப்பினர்களாக இருக்க வேண்டும்.
* குழுக் கூட்டங்களில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்.
* அவரவர் கருத்துக்களையும், தகவல்களையும் சுதந்திரமாக வெளிப்படுத்த வேண்டும்.
* சேமிப்பு, சந்தா, கடன், வட்டி ஆகியவற்றை தவறாமல் செலுத்த வேண்டும்.
* தாம் வாங்கிய கடனை, தவணை தவறாமல் திருப்பி கொடுக்க வேண்டும்.
* மற்ற சக உறுப்பினர்களிடம் நல்ல ஒற்றுமை, நல்லுறவு போன்ற பண்புகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
* சுழற்சி முறையில் வங்கிக்குச் சென்று வர வேண்டும்.
* மகளிர் திட்டம் மற்றும் பிற துறைகளின் மூலம் அளிக்கப்படும் பயிற்சிகளில் கலந்து கொள்ள வேண்டும்.
* தமக்களிக்கப்பட்ட பொறுப்புகளைத் தன்னார்வத்துடன் ஏற்று நிறைவேற்ற வேண்டும்.
* குழுவின் நிலை, தரம் போன்ற அனைத்தையும் அறிந்திருத்தல் வேண்டும்.
* சமூக மற்றும் கிராம முன்னேற்ற செயல்பாடுகளில் முழுமையாக ஈடுபட்டு செயலாற்ற வேண்டும்.
* கிராம சபா கூட்டங்களில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்.
* குழுவில் பிரச்சனைகள் ஏற்பட்டால், உடனே விவாதித்து சரியான தீர்வினைக் காண உதவ வேண்டும்.
* பொதுவாக ஏனைய குழுக்களுக்கு முன் மாதிரியாக, சிறந்த குழுவாக திகழப் பாடுபடுதல் வேண்டும்.
* ஊக்குனர், பிரதிநிதிகளின் சரியான செயல்பாடுகளுக்கு சீரிய ஓத்துழைப்பு தந்து சிறப்பாக குழுவினை வழி நடத்திச் செல்ல உதவுதல் மற்றும் எல்லா உறுப்பினர்களும் எண்ணறிவும், எழுத்தறிவும் பெற்றுத் திகழ முனைய வேண்டும்.
மகளிர் சுய உதவிக்குழு பொறுப்பாளர்களின் பொறுப்புகள்:
* ஊக்குனர்கள், பொறுப்புமிக்கவர்களாக இருந்து, குழுவை கட்டிக் காத்தல் வேண்டும்.
* குழுவை முறையாக நடத்த, வேண்டிய வழிமுறைகளைக் கடைப்பிடித்தல் வேண்டும்.
* குழுக் கூட்டங்களை தவறாமல் நடத்த வேண்டும்.
* குழுக் கூட்டங்களில் உறுப்பினர்கள் கலந்து கொள்ள ஊக்குவிக்க வேண்டும்.
* உறுப்பினர்களிடையே நல்லுறவு மற்றும் ஒற்றுமையை மேம்படுத்த வேண்டும்.
* குழுக் கூட்டத்தில் விவாதிக்கும் கருத்துகளையும், தீர்மானங்களையும் பதிவு செய்ய வேண்டும்.
* குழுவின் பதிவேடுகளை முறையாக பராமரிக்க வேண்டும்.
* குழுக் கணக்கினை ஆண்டு தணிக்கைக்கு ஏற்பாடு செய்தல் வேண்டும்.
* தணிக்கை மற்றும் தரம் பிரித்தலுக்குப் பிறகு அறியப்பட்ட குறைகளை பூர்த்தி செய்ய வேண்டும்.
* கிராம சபா கூட்டங்களில் உறுப்பினர்கள் கலந்துக் கொள்ள ஆர்வமூட்ட வேண்டும்.
* ஆண்டுச் செயல் திட்டம் தீட்டி செயல்பட ஊக்குவிக்க வேண்டும்.
* பயிற்சியில் அறிந்து கொண்ட கருத்துகளை உறுப்பினர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும்.
* குழு வெளிக்கடன் பெற, கடன் பெறுவதற்கான மதிப்பீட்டிற்கு தயார் செய்தல் வேண்டும்.
* உறுப்பினர்களிடையே எண்ணறிவு, எழுத்தறிவினை மேம்படுத்த வேண்டும்.
* பஞ்சாயத்து / வட்டார அளவிலான குழுக் கூட்டங்களில் கலந்துக் கொள்ள உறுப்பினர்களை தவறாமல் அனுப்ப வேண்டும்.
* குழுவின் நிதிநிலைமையை உறுப்பினர்களுக்கு உரிய நேரத்தில் தெரிவிக்க வேண்டும்.
* கிராம அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய உறுப்பினர்கள் மற்றும் கிராம மக்களின் ஒத்துழைப்பைப் பெற வேண்டும்.
மகளிர் சுய உதவிக்குழுவில் பராமரிக்கப்பட வேண்டிய பதிவேடுகள்:
* வருகைப் பதிவேடு
* தீர்மான புத்தகம்
* சேமிப்பு பேரேடு [தனி நபர்]
* கடன் பேரேடு [தனி நபர்]
* தனி நபர் சேமிப்பு மற்றும் கடன் புத்தகம்
* ரொக்க ரசீது
* பண பட்டுவாடா ரசீது
* வங்கி பாஸ்புத்தகம்
* ரொக்கப் புத்தகம்
* பொதுப் பேரேடு
* பார்வையாளர் புத்தகம்
மகளிர் சுய உதவிக்குழுக்கான வங்கி நேரடிக்கடன்:
மானியம் எதுவும் இல்லாமல் வங்கிகள் நேரடியாகவே சுய உதவிக் குழுக்களுக்குக் கடன் வழங்கித் திரும்ப பெறுதலையே வங்கி நேரடிக் கடன் என்கிறோம்.
மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான சுழல் நிதி
சுய உதவிக் குழுக்களின் தொகுப்பு நிதியை மேம்படுத்தவும், நிதி மேலாண்மை, கடன் மேலாண்மைத் திறன்களை மேம்படுத்தவும் அரசுத் திட்டங்களின் கீழ் வழங்கப்படும் தொகையாகும். அரசால் வழங்கப்படும் ரூ. 10,000/- தொகையுடன் குறைந்தபட்சம் ரூ. 50,000/- சேர்த்து வங்கிகளால் வழங்கப்படும்.
மகளிர் சுய உதவி குழு திட்டத்தின் சிறப்பம்சங்கள்:
கூட்டத்திற்கு வருகை தரும் உறுப்பினர்கள் பல தகவல்களைப் பெறவும், விழிப்புணர்வு அடையவும் வழிவகை செய்கிறது.
சேமிப்பு, தொழில் முனைப்பு போன்ற செயல்பாட்டிற்கு இக்கூட்டம் மிகவும் அவசியமாக திகழ்கிறது.
ஆண்டுச் செயல் திட்டம் தயாரிக்க பெரிதும் உதவுகிறது.
கிராம மேம்பாட்டிற்கும், சுய முன்னேற்றத்திற்கும், மகளிர் சுய உதவி குழுக் கூட்டமே அடிப்படையாக திகழ்கிறது.
வங்கியின் உதவிகள், அரசு நலப்பணிகள் யாவும் பெற வழிவகை செய்கிறது.
கருத்துகள் இல்லை