* மரத்தின் பெயர் : யூகலிப்டஸ் மரம்
* தாவரவியல் பெயர் : யூகலிப்டஸ் குளோபுலஸ்
* ஆங்கில பெயர் : Eucalyptus Tree
* தாயகம் : ஆஸ்திரேலியா, டாஸ்மானியா
* மண் வகை : வண்டல், சரளை, சிவப்பு மண் வகைகளில் நன்றாக வளரும் மரம்
* தாவர குடும்பம் : மிர்டேசியே
* மற்ற பெயர்கள் : தைல மரம்
பொதுப்பண்புகள் :
* தைல மரம் ஆங்கிலேயர்களால் அதிக விளைச்சலைத் தரும், எரிபொருள் மரவகை சோதனைக்காக இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர் மரக்கூழ் தொழிற்சாலைத் தேவைகளுக்காக பலரால் பெரிதும் விரும்பிப் பயிரிடப்பட்டது. தைலமரங்களில் 700-க்கும் மேற்பட்ட இனங்கள் உள்ளன. இம்மரங்கள் 330 மி.மீ லிருந்து 1500 மி.மீ. வரை மழையளவு உள்ள பகுதிகளில் செழித்து வளரும் இயல்புடையவை.
* தைல மரம் விரைவாகவும், உயரமாகவும் வளரக்கூடியது. மேலும் 2 மீ சுற்றளவு கொண்ட இம்மரமானது மண்ணின் நீரையும் மற்ற சத்துக்களையும் நன்றாக உறிஞ்சி வளரக்கூடிய வேர் வகையினைக் கொண்டது. இதன் இலைகள் கடினத் தன்மையும், நேர்குத்தாகத் தொங்கும் இயல்பையும் உடையவை. இம்மரமானது ஜூலை - ஆகஸ்ட் மாதங்களில் பூக்கும் பருவத்திற்கு வரும்.
* தைலமரம் பல்வேறு வகையான மண் மற்றும் காலநிலைகளுக்கேற்ப வேகமாக வளரக்கூடிய, அதிக மறுதாம்பு வாய்ப்புள்ள மர வகையாகும்.
* தைல மரம் வறட்சிதாங்கும் தன்மையுடையதாக அறியப்பட்டாலும் இம்மரத்தின் வளர்ச்சிக்கு ஆண்டு மழையளவு குறைந்த பட்சம் 800 மி.மீ. தேவை.
* இம்மரமானது வண்டல், சரளை, சிவப்பு மண் வகைகளில் நன்றாக வளரக்கூடியது. மண்ணின் ஆழம் குறைவாக இருக்கக்கூடாது. அதிக உவர் மற்றும் களர் நிலங்களிலும் வளராது. அதே போல் மண்ணின் அமிலகாரத்தன்மை 6 லிருந்து 8 வரை இருக்க வேண்டும். அதிக மண் அரிப்பு மற்றும் நீர் தேக்க நிலங்கள் கூடாது.
பயன்கள் :
* தைல மரங்கள் வேகமாக வளரக்கூடிய மர வகையாகும். இம்மரம் காகிதம், காகிதக்கூழ், துகள் அட்டைகள் மற்றும் மொத்த அட்டைகள் தயாரிக்கும் பணிகளுக்கும் பெரிதும் உகந்த மரம்.
* இம்மரம் எரிபொருள், கரித்துண்டுகள் தயாரிக்கப்பயன்படும்.
* இம்மரம் எளிய கனமான கட்டுமானப்பணிகளுக்கும், இரயில்வே தண்டவாளக் கட்டைகள், பாலங்கள் கட்டுவதற்கும் குச்சிகளாகவும் பயன்படும்.
* யூ டெரிடிகார்னிஸ் வகை தைலமரங்கள் பதப்படுத்தப்பட்ட பிறகு கதவுகளின் நிலைகள், சன்னல் கதவுகள், மரச்சாமான்கள், அலமாரிகள், கைப்பிடிகள், அட்டைப் பெட்டிகள் தயாரிக்கப் பயன்படுகின்றன.
* இலைகளிலிருந்து பெறப்படும் நீர்மம், பூச்சி எதிர்ப்புத்தன்மையுடையதால் உயிரியல் பூச்சி எதிர்ப்புகள் தயாரிக்கப்பயன்படுகின்றன.
வளர்ப்பு முறைகள் :
* தைல மர நாற்றுக்களை விதைகள் மூலமாகவும், விதையில்லா இனப்பெருக்க வழிமுறையான குச்சிகள் (பதியம்) மூலமாகவும் உற்பத்தி செய்யலாம். ஒரு கிலோ விதையில் சராசரியாக 6,42,000 வீரிய விதைகள் இருக்கும். ஆனால் தற்போது பதிய முறையில் உற்பத்தி செய்யப்பட்ட கன்றுகளே அதிக மகசூல் தருவதால், பதியக் கன்றுகளை மண்ணின் தன்மையறிந்து நடவு செய்வது நல்லது.
* முதலில் நிலத்தினை நன்கு உழவு செய்ய வேண்டும். பருவ காலங்களில் தைலமர நாற்றுக்களை 3 மீ X 15 மீ அல்லது 3 மீ X 2 மீ இடைவெளியில் 45 செ.மீ. X 45 செ.மீ. X 45 செ.மீ.அளவுள்ள குழிகளில் நட வேண்டும்.
* நாற்றுகளை குழிகளில் நடும்போது 1-2 கிலோ இயற்கை எருவுடன் 25 கிராம் தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்து கலந்த உரம் இடவேண்டும். தவிர ஒவ்வொரு குழியிலும் குப்பை உரத்துடன் 25 கிராம் டிரைகோடெர்மா (அல்லது) சூடோமோனாஸ் கலந்து இடுவதால் வேரழுகல், வேர் வாடல் நோய்களிலிருந்து, நடப்பட்ட கன்றுகளைப் பாதுகாக்கலாம்.
* முதல் இரண்டு ஆண்டுகளில் பருவமழை இல்லாத காலத்தில் நீர்ப்பாசனம் அவசியம். மேலும் இரண்டு முதல் மூன்று முறை களைகளை அகற்ற வேண்டும்.
* மண்ணின் ஆழம் 1.0 மீட்டருக்கு குறைவாக உள்ள நிலத்தைத் தவிர்க்க வேண்டும். அதிக உவர் மற்றும் களர் நிலங்களைத் தவிர்க்க வேண்டும்.
நோய் தடுக்கும் முறைகள் :
* தைல மரங்களைத் தாக்கும் முக்கிய நோய்கள் வேரழுகல், தண்டு கொப்புள நோய், இளஞ்சிவப்பு தண்டழுகல் மற்றும் நாற்றுக்களைத் தாக்கும் பழுப்பு நோய் முதலியனவாகும்.
* நாற்று அழுகல் நோய்க்கு நாற்று நடும் குழிகளில் 25 கிராம் டிரைகோடெர்மா (அல்லது) சூடோமோனாஸ் இடவேண்டும். கார்பென்டாசிம் 0.1% கரைசலை வேர்பாகம் முழுவதும் நனையும் படி ஊற்ற வேண்டும்.
கருத்துகள் இல்லை